தஞ்சை: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை காவேரி நகர் 5ம் தெரு வீட்டு மனை எண் 103ல் மூதாட்டி வீட்டு சிறையில் உள்ளார் என்ற தகவல் சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன் என்பவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, உணவருந்தி பல நாட்கள் ஆன நிலையில் ஒரு மூதாட்டி உடுத்த உடையின்றி அலங்கோல நிலையில், மண்ணை சாப்பிட்டு வந்துள்ளார். இதை வீடியோ எடுத்த சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன் இதுகுறித்து வாட்ஸ் அப் வாயிலாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகாராக அனுப்பினார்.அந்த மூதாட்டியின் கணவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்பதும், அவரது இரண்டு மகன்களில் மூத்த மகன் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதும், இரண்டாவது மகன் பட்டுக்கோட்டையில் வசிக்கிறார் என்றும், அவர் தூர்தர்ஷனில் பணியாற்றுபவர் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின்படி, சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.இதில் மூதாட்டியின் பெயர் ஞானஜோதி(62) என்பதும், மூத்த மகன் சண்முகசுந்தரம், இளைய மகன் வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் பாதுகாப்புடன் சமூக நலத்துறை குழுவினர் சென்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஞானஜோதியை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்….