வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது

* தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்* பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கினார்* தண்டையார்பேட்டையில் பரபரப்பு சம்பவம்தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில், ஆங்கில புத்தாண்டின்போது வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை கண்டித்ததால், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவன், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் போலீசில் சிக்கினார். தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (33). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பபிதா (32). இருவரும் காதலித்து, 10 வருடங்களுக்கு முன், திருமணம் செய்துள்ளனர். தம்பதிக்கு 9 வயதில் பெண் குழந்தையும், 7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளன. இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். பபிதா, தனது வீட்டின் தரை தளத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி பபிதா குழந்தைகளுடன் மணலியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, மறுநாள் ஜனவரி 1ம் தேதி நந்தகுமார் தனது நண்பர்களுக்கு போன் செய்து, புத்தாண்டு கொண்டாட தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர், நண்பர்களுடன் காசிமேடு சென்று படகில் கடலில் சுற்றியுள்ளார். கடற்கரையை சுற்றிபார்த்துவிட்டு, மாலை 3 மணிக்கு நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்த நந்தகுமார், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மாலை 5 மணிக்கு, நண்பர்கள் அனைவரும் சென்று விட்டனர். இதனையடுத்து நந்தகுமார் மனைவி பபிதாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, அவர் இரவு 7 மணிக்கு பபிதா தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் காலி மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், சைடிஷ்கள் சிதறி கிடந்துள்ளது. இதை பார்த்து ஆத்திரமடைந்த பபிதா, வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியது தொடர்பாக கணவனை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நீ இதுபோல் நடந்து கொண்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன், என கூறி கணவருடன் பபிதா வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த நந்தகுமார், நீ எதற்கு தற்கொலை செய்து கொள்கிறாய், நானே உன்னை கொலை செய்கிறேன், என கூறி துணியால் கழுத்தை நெரித்துள்ளார். இதில், அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்துள்ளார். பின்னர், தூங்குவதுபோல் மனைவியை படுக்கவைத்துவிட்டு, வீட்டில் இருந்த காலி மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், சைடிஷ் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்து, வீட்டில் இருந்து அகற்றிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் தூங்கியுள்ளார். மற்றொரு அறையில் விளையாடிக்கொண்டு இருந்த மகள் வந்து பபிதாவை எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை. நந்தகுமாரும் ஒன்றும் தெரியாதது போல் நடித்து, மகளுடன் சேர்ந்து, மனைவியை எழுப்பியுள்ளார். நீண்ட நேரம் எழுப்பியும் அசைவின்றி இருந்ததால், மகள் அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது பபிதா இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தபோது, பபிதா தூக்கத்தில் இறந்ததாக நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பபிதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சடலத்தை பெற்ற நந்தகுமார், வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, உறவினர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்துள்ளார். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் இரவு வெளியானது. அதில், பபிதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, நந்தகுமாரை பிடித்து விசாரித்தபோது, மது போதை தகராறில் மனைவியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீ எதற்கு தற்கொலை செய்து கொள்கிறாய், நானே உன்னை கொலை செய்கிறேன், என கூறி துணியால் கழுத்தை நெரித்துள்ளார்….

Related posts

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

சிவகாசி அருகே பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கு: 2 பேர் கைது

மதுரை அருகே முதியவர் கொலை வழக்கில் 5 பேர் கைது!!