போடி, டிச. 23: போடி அருகே, ரெங்கநாதபுரத்தில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தவமணி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர், கீழே விழுந்ததில் காயமடைந்து சென்னையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து நேற்று அதிகாலை 3.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, மர்மநபர்கள் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வந்து, பீரோவை உடைத்து அதிலிருந்த ஒன்றரை பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசுவை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து தவமணி மகன் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.