வீட்டின் கதவு உடைத்து நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலை குடியாத்தம் அருகே துணிகரம்

குடியாத்தம், செப்.7: குடியாத்தம் அருகே வீட்டின் கதவு உடைத்து 2 சவரன் நகை, பணம், எல்இடி டிவி உள்ளிட்டவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்மடுகு பகுதியை சேர்ந்தவர் சந்தியா(45). இவர் காலை உணவு திட்டத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 சவரன் தங்க நகை, ₹10 ஆயிரம் ரொக்கம், எல்இடி டிவி, பட்டு புடவைகள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தியா குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு