திருவொற்றியூர்: வீடு புகுந்து திருடியபோது, வீட்டின் உரிமையாளர் வந்ததால் திடீரென மாடியிலிருந்து கீழே குதித்த கொள்ளையன் படுகாயமடைந்தான். அவனை பொதுமக்கள் சுற்றிவளைத்து போலீசில் ஒப்படைத்தனர். அயனாவரம், மேடவாக்கம் 2வது தெருவில் வசித்து வருபவர் சுந்தர் (41). இவர், நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் வீட்டின் தரைதளத்தில் தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முதல் தளத்தில் ஏறிய மர்ம நபர், ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயன்றுள்ளார்.இதை பார்த்த பக்கத்து வீட்டினர், சுந்தரை செல்போனில் தொடர்புகொண்டு இதுபற்றி தெரிவித்துள்ளார். உடனே, சுந்தர் முதல் தளத்திற்கு சென்றபோது, அவரை பார்த்த திருடன், உடனே கீழே குதித்து தப்ப முயன்றான். இதில், அவனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தப்ப முடியாமல் அங்கியே விழுந்தான். அவனை பொதுமக்கள் பிடித்து, தலைமை செயலக காலனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், ராயப்பேட்டையை சேர்ந்த அர்ஜூன் (21) என்பதும், இவன் மீது அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்….
வீடு புகுந்து திருடியபோது மாடியிலிருந்து கீழே குதித்த கொள்ளையன் படுகாயம்: பொதுமக்கள் சுற்றிவளைத்தனர்
previous post