மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகருக்கு உட்பட்ட திருவிக.நகர், அருணாகுளம், நல்லகுளம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் அனைத்தும் மதுராந்தகம் ஏரிக்கரையோரமாக உள்ளது. இவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். இவர்களின் வீடுகளுக்கு தேவையான மின்வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீர்நிலை புறம்போக்கில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி மேற்கண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதம் 15ம் தேதிக்குள் அனைவரும் வீடுகளை காலி செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையும் அறிவித்தது. இந்த நிலையில், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘அனைத்து வாழ்வாதார உரிமைகள் பெற்று குடியிருந்து வந்த நிலையில் இடத்தை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை மதிக்கின்றோம். இதற்கு பதிலாக எங்கள் நகரத்துக்கு அருகில் மாற்றிடம் வழங்கி வீடு கட்டித் தர வேண்டும். அதுவரை இந்த இடத்தை காலி செய்யமாட்டோம்’ என்றனர்.மதுராந்தகம் அருகே கிராமத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது….