தொண்டி, ஜூன் 25: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள், கடைகளில் குரங்குகள் நுழைந்து சேதம் விளைவிக்கிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குரங்குகள் கூட்டமாக திரிகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து பழங்கள் முட்டை உணவு பொருள்களை பாத்திரத்துடன் தூக்கி செல்கிறது.
குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை பறித்துச் சென்று விடுகிறது. கடை வீதிகளில் திரியும் குரங்குகள் வாழைப்பழம், லேஸ் பாக்கெட்டுகளை அப்படியே தூக்கிச் சென்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் பெரும் பாதிப்படைகின்றனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ரபீக் ராஜா கூறியது, வீடுகளுக்கு வரும் குரங்குகளை விரட்டினால் நம்மை தாக்க முயலுகிறது. வீட்டிற்குள் புகுந்து பழங்கள் மற்றும் பொருள்களை எடுத்துச் செல்கிறது. இதனால் அச்சமாக உள்ளது. குரங்குகளை வனப்பகுதிகளுக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.