காரைக்குடி, ஜூன் 23: காரைக்குடி அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு வகுப்புகள் துவக்கவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் சசிகுமார் வரவேற்றார். விவேகானந்தா கல்விகுழும செயலாளர் சொக்கலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், கடந்த 17 ஆண்டுகளில் இங்கு படித்த பல்வேறு மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளிலும், தலைசிறந்த தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு தனியார் நிறுவனங்களின் மூலம் வளாக நேர்காணல் நடத்தி மாணவர்கள் படிக்கும் முடிக்கும் முன்னரே பணிநியமன ஆணைகளை வழங்கி வருகிறோம். படிக்கும் காலத்தில் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் படிக்க வேண்டும். இந்த 3 ஆண்டுகள் தான் உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது, என்றார். நிகழ்ச்சியில் கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் உருமநாதன், ஜெரால்டு, ராஜாகோபாலன், பழனிவேலு, பேச்சாளர் நாராயணகோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாரியத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.