தாம்பரம்: சேலம் பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க விவசாயிக்கு கடந்த 7 ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பது கண்டறியப்பட்டு, கடுமையான வென்ட்ரிகுலர் செயலிழப்பு இருந்தது. இதனையடுத்து, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த 27 வயது வாலிபர், கடந்த 14ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.இதனைதொடர்ந்து, இறந்த வாலிபரின் குடும்பத்தினர் உடல், உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்து, தமிழ்நாடு உறுப்பு பதிவேட்டிற்கு அனுப்பப்பட்டு, பின்னர், நிலையான பதிவு நெறிமுறையின்படி ரேலா மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அந்த வாலிபரின் இதயம் மதுரையிலிருந்து, 1 மணி நேரத்தில் விமான மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரின் உயிர் பிழைத்து நலமாக உள்ளார்….