ஈரோடு : ஈரோடு அருகே விவசாயி தோட்டத்தில் 35 ஆண்டுகள் பழமையான சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூரை அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. இவரது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் தானாகவே வளர்ந்த சில சந்தன மரங்கள் இருக்கின்றன. இந்த சந்தன மரங்களை அவர் பாதுகாத்து பராமரித்து வளர்த்து வந்தார். இது தொடர்பாக வருவாய் துறையிலும் அனுமதி பெற்று வளர்த்து வரப்பட்டது. இந்நிலையில் சந்தன மரத்தில் ஒன்றை திருடர்கள் நள்ளிரவில் வெட்டி சென்றிருக்கிறார்கள். 35 ஆண்டுகள் பழமையான இந்த சந்தன மரத்தை மின் வேலி அமைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் அதை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். அந்த சந்தன மரத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ராமசாமி அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே சந்தன மரத்தை கடந்த 2010 ஆண்டு திருடர்கள் வெட்டுவதற்கு வந்த பொது ராமசாமி துப்பாக்கியால் சுட்டதில் திருடன் ஒருவன் உயிரிழந்தான். அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு அதே சந்தன மரம் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. …