பெங்களூரு: விவசாயிகள் டிராக்டர் பேரணியை கைவிட வேண்டும் என்று தோட்டக்கலை துறை அமைச்சர் ஆர். சங்கர் தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதாவில் தனது அறைக்கு சிறப்பு பூஜை நடத்திய அமைச்சர் ஆர். சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கு ஹாவேரி பொறுப்பு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அவர் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். துறை மாற்றியமைக்கப்பட்ட பின் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால் மக்களுக்கு சேவை செய்யும் துறை வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அவர் சில காலம் இந்த பதவியில் பணி ஆற்றுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். இதனால் எந்த அதிருப்தியும் இல்லாமல் கொடுக்கப்பட்ட துறையை நிர்வாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதே போல் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேளாண் துறை அமைச்சருடன் இணைந்து செயல்படுவேன். விவசாயிகளுக்கு ஆதரவாக தோட்டக்கலை துறை, மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் டிராக்டர் பேரணியை கைவிட வேண்டும். தோட்டக்கலை துறையின் மூலம் விவசாயிகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் பட்டு கூடு விவசாயிகள் பிரச்னை குறித்தும் கேட்டறியப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். விவசாயிகள் தற்கொலைக்கான காரணம் குறித்து அறிந்துக்கொண்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். கொரோனா பாதிப்பு நேரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தோட்டக்கலை பக்கம் கவனம் செலுத்தினர். இவர்களை ஊக்கப்படுத்த மாநில அரசு முயற்சித்துள்ளது. மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் என்னுடைய அரசியல் குரு. அவர் மீது கவுரவமுள்ளது. அவருக்கு வரும் நாட்களில் நல்லது நடக்கும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் அரசியலில் இந்த அளவுக்கு வளர்ச்சியடைய எச்.விஷ்வநாத் காரணம். அவருடைய ஆசீர்வாதம், வழிகாட்டுதலின்படி நடந்து கொள்வேன். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் யாரையும் காதலிக்கவில்லை, விவாகரத்தும் செய்யவில்லை’’ என்றார்….