தேவகோட்டை, ஜூலை 2: தேவகோட்டை தாலுகா போர்குடி குரூப் குணகரை கிராமத்தில் நீர்வரத்து கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று ஆரோக்கியசாமி என்பவர் வருவாய்த்துறைக்கு புகார் மனு அனுப்பினார். தாசில்தார் அசோக்குமார் வருவாய் துறையினருடன் சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். இதில் 7 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பனை ஓலையில் வேயப்பட்டிருந்த கொட்டகைகள் அகற்றினர். இதனைக் கண்டித்து நேற்று தேவகோட்டை தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தேவகோட்டை தாசில்தார் அசோக்குமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில் அரசு புறம்போக்கு நீர் வரத்துக்கால்வாயில் ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இன்றி அகற்றப்பட்டது என தெரிவித்தார்.