Thursday, July 4, 2024
Home » விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டம் உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டம் உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

by kannappan

சென்னை: விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டம், உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை உள்ளிட்ட 26 அம்சங்களுடன் கூடிய தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இந்நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்தது.அதன்படி, நேற்று சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், ஜெயக்குமார் எம்பி, கோபண்ணா, வக்கீல் சுதா, சிரஞ்சீவி, சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், டில்லி பாபு, முத்தழகன், அடையார் துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தேர்தல் அறிக்கையை, பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர்.இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு ஒன்றுக்கு 12ம்வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி வழங்கி அவர்களை பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வர வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கைஎடுக்கப்படும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும். மாதம் ஒருமுறை விசைத் தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும். பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

7 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi