செங்கல்பட்டு: கோவா உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றார் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவரும் வழக்கறிஞருமான சுந்தரமூர்த்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதில், கிட்டத்தட்ட 700க்கும் மேலான விவசாயிகள் போராட்டக் கலத்திலேயே இறந்துள்ளனர். இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல், போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்திக்கக்கூட நேரம் ஒதுக்காத பிரதமர் நரேந்திர மோடி, திடீரென, முடிவெடுத்து 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றார். இதற்கு ஒரே காரணம், 5 மாநில சட்டமன்ற தேர்தல் பயம் தான் தவிர, விவசாயிகள் மீது உள்ள அக்கறை கிடையாது என்றார். அவருடன், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயராமன், குமரவேல், முருகன், நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் உள்பட பலர் இருந்தனர்….