ஓமலூர், மே 30: சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் செல்வமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விதை விற்பனை உரிமம் இன்றி, ஆங்காங்கே தரமற்ற முளைப்பு திறன் கொண்ட விதைகளை விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. தரமான விதைகள் அங்ககச்சான்று துறையின் கீழ் செய்யப்படும், விதை ஆய்வு துணை இயக்குநரால் வழங்கப்படும் விதை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மற்றும் அரசு வேளாண்மை விவாக்க மையங்களில், மானிய விலையில் விதைகள் வாங்கி பயனடையலாம். விதை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் விதைகள், பயிர் ரகம், குவியல் எண், முளைப்புத்திறன் சதவீதம், இனத்தூய்மை, புறத்தூய்மை சதவீதம், காலாவதி நாள், தகுந்த பருவம் போன்றவை அலுவலக மாதிரியாக எடுக்கப்பெறுகிறது.
மேலும், விதைப்பரிசோதனை நிலையத்தில் அனுப்பப்பட்டு தரமற்றது எனில், விதை விற்பனையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் வெளிச்சந்தை மற்றும் விதை உரிமம் இல்லாதவர்களிடம், விதைகளை வாங்கி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏதாவது இருந்தால், கலெக்டர் அலுவலக விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.