Sunday, September 29, 2024
Home » விழுப்புரத்தை கலக்கிய டெல்லி, உ.பியை சேர்ந்த கொள்ளையர்கள் கைது

விழுப்புரத்தை கலக்கிய டெல்லி, உ.பியை சேர்ந்த கொள்ளையர்கள் கைது

by Karthik Yash

விழுப்புரம், ஜூன் 18: தீரன் சினிமா படபாணியில் விழுப்புரத்தில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தவர் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் பகுதிகளில் கடந்த சில மாதமாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பறித்துச்செல்வது, வீட்டை உடைத்து கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் நடந்து வந்தன.

இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி தீபக்சிவாச் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு வழிபறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சேகரித்த தனிப்படை போலீசார் கடைசியில் இந்த வழிபறி கொள்ளையில் ஈடுபட்டது வடமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தாலுகா ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த நசீர் மகன் சதாப் (35), முரதாபாத் மாவட்டம் கஜிபுரா பகுதியை சேர்ந்த அனிஸ் மகன் இர்பான் (42), புதுடெல்லி ராஜீவ் நகரை சேர்ந்த அமீர் ஹுசைன் மகன் அலாவுதீன் என்கிற அலி (27) என்பது தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் கடந்த 3.8.2023 அன்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த விக்கிரவாண்டி ஆசூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகன பெட்டியை திறந்து அதிலிருந்த ரூ.2. 15 லட்சத்தை கொள்ளையடித்ததும், கடந்த 6.4.2024 அன்று மாலை விழுப்புரம் பாப்பான்குளம் சிவன் கோவில் அருகே நடந்துசென்ற விழுப்புரம்- சென்னை மெயின்ரோடு ஆர்.பி. நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கீதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜர் வீதியில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து அங்கிருந்த ஊழியர்களின் கவனத்தை திசைதிருப்பி 13 பவுன் நகையை அபேஸ் செய்திருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் உத்திரபிரதேசத்திற்கு விரைந்து அவர்களை கடந்த மாதம் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் தீரன் பட சினிமா பானியில் வழிபறி, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு சொந்த ஊர் சென்று திருடிய நகை, பொருட்களை விற்பனை செய்வதும் இங்கு லாட்ஜ் உள்ள இடங்களில் வாடகைக்கு எடுத்து நோட்டமிட்டு இந்த சம்பவங்களை அரங்கேற்றியது தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களில் கைவரிசை காட்டிய இவர்களுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

டெல்லி சந்தோஷ்குமார்(27). உத்தரபிரதேசம் சபாபுல்(25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அவர்களது மாநிலத்திற்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அழைத்துவந்தனர். விசாரணையில், நகர காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு பையூரில் வசிக்கும் ராஜா மகன் சீனிவாசன் என்பவர் வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு காமராஜர் வீதியில் உள்ள நகைக்கடைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் வைத்துவிட்டு சென்றதை இவர்கள்தான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

eighteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi