விழிப்புணர்வை தொடர்வோம்

ரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, கடந்த ஜனவரி 16ல் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தற்போது சுமார் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவத்தொடங்கிய காலக்கட்டங்களில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. சுமார் 6 கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரமும் சர்ச்சையை கிளப்பியது. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. இதனால் பெரும்பாலான டோஸ்கள் பயன்படுத்தாமலே வீணாகின.  இந்த நேரத்தில்தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. மக்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தியது. சர்வதேச டெண்டர் கோரியது, சென்னையிலே தடுப்பூசி தயாரிப்பதற்கான முன்னேற்பாடுகளில் கூட களமிறங்கியது. ஒன்றிய அரசு தரப்பில் ஒப்புதல் கிடைக்காத சூழலிலும், தொடர் வலியுறுத்தலின் பேரிலேயே தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. தமிழக அரசும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி, ஒரே நாளில் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை தொடர்ந்து செய்து வந்தது. தற்போதைய நிலவரப்படி 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட தகுதி உடையவர்களில் 75% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி, 31 சதவீதத்தினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒன்றிய அரசின் சாதனை என பார்ப்பதை விட, இதற்காக கடுமையான கள உழைப்பை வெளிப்படுத்திய ஆய்வக விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தளராமல் மேற்கொண்ட செவிலியர்களுக்கு நாம் மிகப்பெரிய நன்றிக்கடன்பட்டுள்ளோம்.  அதே நேரம் தடுப்பூசி போட்டால் கொரோனா நம்மை தாக்காது என்று அர்த்தமல்ல… உடலில் எதிர்ப்பு சக்தியைத்தான் தடுப்பூசிகள் அதிகரிக்கின்றன. தடுப்பூசி போட்டாலும் கொரோனா தாக்கும் ஆபத்து உண்டு. உயிரிழப்பு அபாயம் மிகக்குறைவு என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ‘‘2 டோஸ் தடுப்பூசி போட்டாச்சு… நீ வேணா சண்டைக்கு வா…’’ என்ற வடிவேலு காமெடி பாணியில் சிலர் கொரோனாவை வம்புக்கிழுப்பது போல, முகக்கவசம் அணியாமல் பொது வாகனங்களில் பயணிப்பது, கூட்டங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.வரும் தீபாவளி உள்ளிட்ட பிற பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க சென்றாலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் கொண்டு செல்லுதல், கைகளை சோப்பால் கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர வேண்டும். ஓராண்டுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டால், 3வது அலையை நம்மை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம்….

Related posts

எண்ணமெல்லாம் இங்கேதான்

காலத்தின் அவசியம்

வரம்பு மீறல் கூடாது