பழநி: யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை மூலம் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து பிரத்யேக திசை திருப்பும் கருவி வாங்கப்பட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது.பழநி வனச்சரகத்தில் யானை தாக்கி இதுவரை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். காட்டு விலங்குகளின் அட்டகாசத்தை குறைக்கும் வகையில் வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து யானைகளை திசை திருப்பும் பிரத்யேக கருவிகள் இப்போது வரவழைக்கப்பட்டுள்ளன. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இக்கருவி இரவில் மின்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரத்யேக ஒளிச்சிதறல் நடவடிக்கையால் யானை உள்ளிட்ட விலங்கினங்கள் விளைநிலங்களுக்கு வருவது குறைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.பழநி வனச்சரக எல்லையில் உள்ள தேக்கந்தோட்டம், வெட்டுக்கோம்பை, பாலசமுத்திரம், அண்ணா நகர் பகுதிகளில் இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. …