விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே தனித்தனி வீடுகளில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவர் நேற்று காலை சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே காடல்குடி அடுத்த பூதலாபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் ராஜாமணி அம்மாள்(68). நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்த பிறகு பெட்டிக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற ராஜாமணி அம்மாள், சாப்பிட்டு விட்டு தூங்கினார். இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கையில் அரிவாளுடன், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். சப்தம் கேட்டு விழித்த ராஜாமணி அம்மாள், மர்ம நபரை கண்டதும் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியதோடு தனது பெட்டிக் கடையை நோக்கி ஓடி வந்தார். அதன் அருகே இரவில் கடைசி பஸ்சாக வரும் தனியார் பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டரும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதையறிந்த மூதாட்டி ராஜாமணி அம்மாள், அந்த பஸ்சுக்குள் ஏறி, தன்னைக் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். ஆனால் அந்த மர்ம நபர், அவரை பஸ்சிலிருந்து பெட்டிக் கடை அருகே வரை தரதரவென இழுத்து வந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதைப் பார்த்த தனியார் பஸ்சின் டிரைவரும், கண்டக்டரும், பஸ்சை அங்கிருந்து கிளப்பி, பக்கத்து கிராமத்தில் நிறுத்தி விட்டு, சம்பவம் குறித்து காடல்குடி மற்றும் புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சோடு போலீசார் வந்து பார்த்த போது ராஜாமணி அம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளி அப்பகுதியில் பதுங்கியுள்ளானா என போலீசார் ரோந்து சுற்றியபோது, சம்பவம் நடந்த வீட்டுக்கு அடுத்த வீடு ஒன்று திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது அங்கு முடி திருத்தும் தொழிலாளி பொன்னுச்சாமி (60) கை, கழுத்து, கால்களில் சரமாரி வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா (50) என்பவர் பொதையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கொலைககான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். …