விளாத்திகுளம், ஏப்.22: விளாத்திகுளம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 6 ஆடுகள் பலியாகின. விளாத்திகுளம் பாரதி தெருவைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் வேல்முருகன். இவர் அதே பகுதியில் 15 ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு ஆடுகளை ஆட்டுக்கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை மேய்ச்சலுக்காக ஆடுகளைக் கூட்டிச் செல்ல கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, அவர் வளர்க்கும் ஆடுகளில் 6 ஆடுகள் வெறி நாய்கள் கடித்து குதறியபடி இறந்த நிலையில் கிடந்துள்ளன.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி ஊழியர்கள் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை பார்வையிட்டு இறந்த ஆடுகளின் உடலை எடுத்துச் சென்றனர். இதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் வேல்முருகன் வளர்த்து வந்த 2 ஆடுகள் வெறிநாய் கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெறிநாய் கடியால் பாரதிநகர் பகுதிகளில் ஆடுகள், கன்றுகள் உயிரிழந்து வருவதால் பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெறிநாய்களை பிடித்து கட்டுப்படுத்தவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.