அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் உள்ள கோயில் குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த மீன்கள், வாத்துக்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே திருவீதியம்மன் கோயில் மற்றும் இதனையொட்டி தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில், பொதுமக்களின் பங்களிப்போடு, ஏராளமான வண்ண மீன்கள், வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று கோயில் குளத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட மீன்கள், வாத்துக்கள் அடுத்தடுத்து செத்து மிதந்தன. இதை பார்த்ததும் அப்பகுதி மக்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து, மாநகராட்சி 8வது மண்டல சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, ஊழியர்களின் உதவியுடன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள், வாத்துக்களை அகற்றினர். இதனையடுத்து, குளத்து நீரின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குளத்தில் சமூக விரோதிகள் யாரேனும் விஷத்தை கலந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்….