Thursday, July 4, 2024
Home » விலைவாசி உயர்வை எதிர்த்து மாநிலங்களவையில் கோஷம் 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 பேர் சஸ்பெண்ட்: தரையில் அமர்ந்து தர்ணா; நாடாளுமன்ற இரு அவைகளும் 7வது நாளாக முடங்கின

விலைவாசி உயர்வை எதிர்த்து மாநிலங்களவையில் கோஷம் 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 பேர் சஸ்பெண்ட்: தரையில் அமர்ந்து தர்ணா; நாடாளுமன்ற இரு அவைகளும் 7வது நாளாக முடங்கின

by kannappan

புதுடெல்லி: விலைவாசி உயர்வை எதிர்த்து மாநிலங்களவையில் குரல் கொடுத்த திமுக எம்பிக்கள் 6 பேர் உட்பட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவைக்குள் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் 7வது நாளாக  நேற்றும் முடங்கியது. நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாதை திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுவதால், முதல் நாளில் இருந்தே தொடர்ந்து அமளி ஏற்பட்டு வருகிறது. இதனால், இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகிறது. விவாதம் நடத்தாமல் தப்பிக்க, ஆளும் பாஜ தரப்பில்  பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் தடையை மீறி பதாகை ஏந்தி எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். மக்களவையில் நேற்று முன்தினம் எதிர்ப்பு குரல் எழுப்பிய தமிழகத்தை சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உட்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் இனியும் அமளி செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இரு அவைகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் மீண்டும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கிய போதும் இவர்களின் எதிர்ப்பு தொடர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு சென்று விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதனால், இந்த எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கொண்டு வந்தார். கடும் கூச்சல் குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, திமுகவைச் சேர்ந்த எம்.எம். முகமது அப்துல்லா, கல்யாண சுந்தரம், கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, எம்.சண்முகம் மற்றும் கனிமொழி என்விஎன் சோமு ஆகிய ஆறு எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 எம்பிக்கள், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 3 எம்பிக்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்பி என மொத்தம் 19 எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் (வரும் வெள்ளிக்கிழமை வரை) சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, அவைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி.க்கள் அவையை விட்டு வெளியேறாமல், தரையில் அமர்ந்து தொடர்ந்து கோஷமிட்டனர். அவைத்தலைவர் பலமுறை அவர்களை எச்சரித்தும் வெளியேறவில்லை. அதோடு மற்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால், அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மக்களவை நேற்று காலை கூடியதும், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தன. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், கடும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 காங்கிரஸ் எம்பிக்களும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவையில் மக்கள் பிரச்னையை எழுப்பியதற்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது. ஆளும் தரப்பின் இந்த செயல்பாட்டை கண்டித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்படும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறி உள்ளனர்.* ஜனநாயக குரல்வளையை நெரிக்க முயலும் நிகழ்வுமத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்.சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி என்.வி.என்.சோமு, எம்.எம்.அப்துல்லா, எஸ்.கல்யாணசுந்தரம், இரா.கிரிராஜன் உள்ளிட்ட 19 பேரை இடைநீக்கம் செய்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயலும் நிகழ்வாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, இடைநீக்கத்தை உடனடியாக திரும்ப பெற்று அவர்களை மீண்டும் ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.* கனத்த இதயத்துடன்தான் சஸ்பெண்ட் செய்தோம்மாநிலங்களவையின் ஆளும் கட்சி தலைவர் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பயந்து ஓடுவது நாங்கள் அல்ல. எதிர்க்கட்சிகள்தான். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வந்தபிறகு, விலைவாசி குறித்து விவாதம் நடத்தலாம் என நாங்கள் கூறுகிறோம். ஆனால், அதை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்கின்றன. அவைத்தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அமளியை தொடர்ந்ததால் கனத்த இதயத்துடன் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விட்டது,’ என்றார்.* எங்கள் குரலை மதிப்பதில்லைசஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்பிக்கள், திருச்சி சிவா தலைமையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் மிக முக்கிய பிரச்னையான பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க கோரினோம். அது தான் ஜனநாயக மரபு. ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சிகள் கேள்விக்கு எப்போதும் நாடாளுமன்றத்தில் பதில் கிடைப்பதில்லை. அவை நடவடிக்கை ஒத்திவைப்பு தீர்மானம் வழங்கினோம். பலமுறை விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால், அரசாங்கம் எங்களின் குரலை மதிக்கவில்லை. தற்போது, உச்சகட்டமாக 6 திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் உட்பட 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயக நெறிமுறைக்கு உட்பட்டது கிடையாது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, நாளை (இன்று) ஒரே குரலாக எதிர்க்கட்சிகள் குரலை எழுப்ப திட்டமிட்டு உள்ளோம். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள் என கூறுவது ஆளும் கட்சியின் அச்சத்தின் வெளிப்பாடு. நாட்டின் ஜனநாயகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு உள்ளது. மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள். அவர்கள் கண்டிப்பாக இந்த விவகாரத்தில் தீர்ப்பளிப்பார்கள்,’ என்றனர்….

You may also like

Leave a Comment

20 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi