மதுரை, ஜூலை 24: விராட்டிபத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, பொதுமக்களின் வசதிக்ககா அரசு மருத்துவமனையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் திமுக கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்தார். மதுரை மாநகராட்சி 67வது வார்டு திமுக கவுன்சிலர் நேற்று, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடன் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், மாநகராட்சியின் எல்லை பகுதியில் அமைந்துள்ள விராட்டிபத்தில், மாநகராட்சி சார்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கோச்சடை, அச்சம்பத்து, சம்பக்குடி, புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு மகப்பேறு பிரசவம், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அரசு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்தால், இப்பகுதி மக்களுக்கு மேலும் பலனுள்ளதாக இருக்கும். அதற்கு தேவையான அளவு இடம் உள்ளதால், பொதுமக்கள் நலன்கருதி விரிவாக்கம பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவரிடம் உறுதியளித்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.