கோவை, ஜூலை 14: கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (24). இவர் சிங்காநல்லூர் அருகே ஒண்டிப்புதூர் சாலையில் தள்ளுவண்டி கடையில் பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் (27) என்பவர் வந்தார். அவர் கோகுலிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் பணம் தர மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து பாலமுரளி கிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார். இதனால் பயந்து போன கோகுல் தன்னிடம் இருந்த 300 ரூபாயை எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த பணம் பத்தாது என கூறிய பாலமுரளிகிருஷ்ணன், அவரிடம் மேலும் பணம் கேட்டு கன்னத்தில் அறைந்தார். உடனே கோகுல் அலறி கூச்சல் போடவே, அவ்வழியாக சென்றவர்கள் பாலமுரளி கிருஷ்ணனை பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி கிருஷ்ணனை கைது செய்தனர்.