ஈரோடு: ஈரோட்டில் வியாபாரிகளிடம் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக நிர்வாகிகள் 10 பேர் தலைமறைவு என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும், அதிமுக மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல்மேட்டினை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும், அதிமுக கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு விவிசிஆர் நகரை சேர்ந்த முருகசேகர் (எ) முருகநாதன், சங்க பொருளாளரும், அதிமுக வார்டு செயலாளருமான வைரவேல் உள்ளிட்ட 11 பேர், மார்க்கெட் வியாபாரி 350 பேரிடம் 800 சதுர அடியில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி தலா ரூ.70 ஆயிரம் வீதம் என ரூ.2 கோடி வசூலித்துள்ளனர்.பின்னர், ஈரோடு நசியனூரில் 20.5 ஏக்கர் நிலத்தை வாங்கி, சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டு, வியாபாரிகளுக்கு வீட்டு மனையையும், பணத்தையும் திருப்பி தராமல் ரூ.2 கோடியை மோசடி செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 28ம் தேதி சங்க பொருளாளரும், அதிமுக வார்டு செயலாளருமான வைரவேலை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 10 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டு அதிமுக நிர்வாகிகள் 10 பேர் தலைமறைவாக உள்ளதாக அதிமுக பகுதி செயலாளர் முருகசேகர் படத்துடனும், இரட்டை இலை சின்னத்துடனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போஸ்டர்களை ஒட்டியது யார்? என இதுவரை தெரியவில்லை.போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று மதியம் அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் தலைமையில் புகார் மனு அளித்தனர். …