போபால்: ‘வியாபம்’ ஊழல் குற்றச்சாட்டில் உள்ள பாஜக மாஜி அமைச்சர் கொரோனாவுக்கு பலியானது குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய பிரதேச மாநில முன்னாள் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான லட்சுமி காந்த் ஷர்மா (60), கடந்த மே 12ம் தேதி கொரோனா தொற்று அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி லட்சுமிகாந்த் ஷர்மா உயிரிழந்தார். இவர், நாட்டையே உலுக்கிய மத்திய பிரதேச பணியாளர் தேர்வு வாரியமான ‘வியாபம்’ ஊழல் வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டவர். வியாபம் ஊழல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளில், ஆறாவது வழக்கில் லட்சுமிகாந்த் ஷர்மாவின் பெயர் உள்ளது. இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் விசாரணை அமைப்புகள் தயாராகி வருகின்றன. தற்போது, இவர் கொரோனாவால் இறந்ததாக கூறப்படுவதால், அவரது மறைவில் மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டில், ‘லட்சுமி காந்த் ஷர்மா மரணம் சாதாரணமானது அல்ல. அவர் வியாபம் மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராவார். அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, ஏற்கனவே கூறியிருந்தார். அப்படி இருக்கையில், தற்போது அவரது மரணம் சந்கேதகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வியாபம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ, லட்சிமி காந்த் ஷர்மாவின் மர்ம மரணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்பி விவேக் தங்கா வெளியிட்ட டுவிட் பதிவில், ‘லட்சுமிகாந்த் ஷர்மா, தனக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டு கட்சியை காப்பாற்றி உள்ளார். வியாபம் ஊழல் குற்றச்சாட்டில் உள்ள ஒருவருக்கு, அரசு மரியாதை செய்யப்பட்டது ஆச்சரியப்படுத்துகிறது’ என்றார். மேலும், குவாலியர் சமூக ஆர்வலர் ஆஷிஷ் கூறுகையில், ‘லட்சுமிகாந்த் சர்மாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வியாபம் ஊழலின் ரகசியங்கள் அவரிடம் இருந்தன. இத்தனை நாட்களாக அவர்தான், அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்’ என்றார். …