கோவை, ஆக.18: கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக இருந்த ரோஹித் நாதன் ராஜகோபால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக கடலூர் மாவட்டத்தில் கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய அசோக்குமார் நியமிக்கப்பட்டார். இவர் கோவையில் நேற்று பொறுப்பேற்ற பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்‘‘கோவை மாநகரில் பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். விபத்து இல்லாத கோவையை உருவாக்க போக்குவரத்து தொடர்பான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். விபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். புதியதாக பொறுப்பேற்ற துணை கமிஷனருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.