மதுராந்தகம், மே 29: மதுராந்தகத்தில் விபத்தில் சிக்கி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுராந்தகத்தில் சாலை விபத்தில் சேதமடைந்த கார் ஒன்றை, மதுராந்தகம் போலீசார் பஜார் வீதியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த கார் நேற்று, திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால், அப்பகுதியில் கடை வைத்திருப்போர், சாலையில் செல்வோர் என அனைவரும் பதற்றமடைந்து அங்குமிங்குமாக ஓடினர். இதனையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர், உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கொழுந்து விட்டு எரிந்த காரை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.