விபத்தில் சிக்கியவர்களிடம் லஞ்சம் பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் சிக்கியவர்களிடம், லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். தாம்பரம் காவல் ஆணையரகம் அமைக்கப்பட்ட பின்,  விபத்துகள் குறித்து  விசாரணை செய்ய, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், இங்கு ஆய்வாளராக ராணி பணி அமர்த்தப்பட்டார். இந்நிலையில், இவருக்கு  காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட ஜீப்பை ஓட்டுவதற்கு,  தனது சொந்த செலவில் டிரைவர் ஒருவரை நியமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்து  நடந்தால், தனது  டிரைவரை  அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் சம்பவ இடத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.மேலும்,   விபத்து நடந்த இடத்திற்கு சென்றதும் தனக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துவிட்டு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை லஞ்சமாக அவர் கேட்டு பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.இதுதொடர்பாக, பொதுமக்கள் சிலர் தாம்பரம் சரக காவல்துறை கமிஷனர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தனர். அதோடு,  உளவுத்துறை போலீசாரும் இதுதொடர்பாக ஏற்கனவே, அறிக்கை ஒன்றை தாம்பரம் சரக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். இதையடுத்து, இந்த புகார்கள் குறித்து விசாரிக்க பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையாவிற்கு, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரித்த துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, குற்றச்சாட்டுகள் உண்மை என்று  அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு துறை  இன்ஸ்பெக்டர் ராணியை, நேற்று சஸ்பெண்ட் செய்து, தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்….

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது