Monday, July 8, 2024
Home » விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

by kannappan

சென்னை : விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே மாண்புமிகு உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்.  நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல; இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் – ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.     கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை  தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  (மேசையைத் தட்டும் ஒலி)  நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.   கேரள மாநிலத்திலே, ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால்தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.   தமிழ்நாட்டிலும் இன்றுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாகத் தடுக்கப்படவில்லை; அங்குமிங்கும் கொஞ்சம் இருக்கிறது.  அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது; 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.  ஆகவேதான், பொது மக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலேகொண்டு, 15-9-2021 வரை அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் பொருந்தும்.     பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தனி நபர்களைப் பொறுத்தவரையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.  ஆகவே, இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். அதையொட்டி, நான் இன்னொரு அறிவிப்பையும் நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்.  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.       இதனையெல்லாம் இந்த அரசு கருத்திலேகொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக் கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். …

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi