பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் பெருமாள் கோயிலில் அம்பு போடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் வரதராஜ கம்ப பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் விஜயதசமியை பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வான பெருமாள் கோயில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு, அதில் வாழை மரம் கட்டி அதற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு வரதராஜ கம்ப பெருமாள் சுவாமியானது அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வீமபெருமாள் கோயில் முன்பு தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடு தோறும் பூ, தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து பெருமாளை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கோயில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.