சேந்தமங்கலம், ஜூலை 10: சேந்தமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பணரோஜா (46), டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் சேந்தமங்கலம் தொகுதி அமைப்பாளராக உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் ராஜ்குமார், உதயகுமார் உள்ளிட்ட 3 பேருடன், தனித்தனி டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, சாலையூரில் 3 டூவீலர்களில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், பணரோஜா உட்பட 4 பேரையும் வழிமறித்து தாக்கினர். இதில் பணரோஜாவை மட்டும் குறி வைத்து மர்மக்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவரது வலது கை துண்டானது. இது குறித்து, சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சேலத்தை சேர்ந்த நியாஸ் பாஷா (24), விக்னேஷ் (25), புதுச்சத்திரம் கதிராநல்லூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) உட்பட 8 பேரை கைது செய்து கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட சிறைகளில் அடைத்தனர். இதில் நியாஸ் பாட்ஷா, விக்னேஷ், தினேஷ் குமார் ஆகியோரை, நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் உமா, குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.