காரமடை, ஜூலை 30: காரமடை அருகே தோலம்பாளையம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கூழை (70). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். இந்த தம்பதிக்கு ரமேஷ் குமார் (38), தேவராஜ் (34) என்ற இரு மகன்கள் உள்ளனர்.இதில் ரமேஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் வெள்ளியங்காடு பகுதியில் வசித்து வருகிறார். தேவராஜ் காரமடையை அடுத்துள்ள கோட்டைப்பிரிவு பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், திருமணமாகவில்லை என மன வருத்தத்தில் தேவராஜ் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய கூழை அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தேவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.