திருப்புத்தூர், செப். 14: ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (29). இவர் திருப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்புத்தூர் அருகே குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும், இவரது மனைவி பாண்டிமீனாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்னை காரணமாக புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு நாட்களில் ரமேஷின் பெற்றோர் திருப்புத்தூர் வருவதாகவும், வந்த பின்பு பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்வது என்றும் முடிவு எடுத்துள்ளனர். இந்நிலையில், மது போதையில் இருந்த ரமேஷ் நேற்று மாலை கல்வெட்டுமேட்டுப் பகுதியில் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.