வாலிபருக்கு சரமாரி வெட்டு: நள்ளிரவில் மர்மநபர்கள் அட்டகாசம்

கூடுவாஞ்சேரி: நண்பனை அடித்தவர்களை தட்டிக்கேட்ட வாலிபருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. மறைமலைநகர் நகராட்சி தைலாவரம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் திவாகர் (23). உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கிறார். கடந்த மாதம் 27ம் தேதி, திவாகரின் வீட்டை உடைத்து 3 சவரன் நகை, ஒரு கொலுசு, ஒரு லேப்டாப், ஒரு செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். புகாரின்படி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்க்கும் காவலாளியை, 10 பேர் கும்பல் சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு தப்பியது. இதை பார்த்ததும், தைலாவரம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த மக்கள், மர்மநபர்களை மடக்கி தட்டி கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த மர்மநபர்கள், நேற்று முன்தினம் இரவு அம்பேத்கர் தெருவுக்கு மீண்டும் சென்றனர். அப்போது, அவர்களை தட்டிக்கேட்ட வாலிபர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். அந்த நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பூபதிராஜா (22), தனது நண்பரை அடிப்பதை பார்த்து தடுத்து, அவர்களை தட்டி கேட்டார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால், பூபதிராஜாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பூபதிராஜாவை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மசூதி எதிரே 10 பேர் கொண்ட கும்பல் தங்கியிருந்த வீட்டை போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு நம்பர் பிளேட் இல்லாத 2 பைக்குகள், 3 பட்டா கத்தி, 15 செல்போன்கள், 2 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை