அரியலூர், அக். 4: அரியலூர் அடுத்துள்ள வாலாஜ நகரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் அபிநயா இளையராஜன், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டங்களில், 2024 – 2025 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணி விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன் , மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
இதே போல், தாமரைக்குளத்தில் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார், துணைத் தலைவர் கவிதாமுருகேசன், எருத்துக்காரன் பட்டி ஊராட்சித் தலைவர் பரமசிவம், ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவர் செங்கமலை, துணைத் தலைவர் செல்வி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பிரநிதிகளாக கலந்து கொண்டனர்.