வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் பட்டா, வீட்டுமனை வழங்கக் கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு பாதாள சாக்கடை, சாலை வசதி, மழை நீர் வடிகால்வாய் வசதி உள்ளிட்ட மக்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இங்கு வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீட்டு மனை இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பலதரப்பு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீட்டுமனை உள்ளவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் கலைச்செல்வி மோகன், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிதர் ஆகியோரை சந்தித்து அவர்கள் மனு வழங்கினர். உடன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் கருணாகரன், வெங்கடேசன், பேரூர் திமுக இளைஞரணி நிர்வாகி சுகுமாரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.