வாலாஜாபாத் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி உரிமையாளர்களிடம் ₹6.30 லட்சம் அபராதம் வசூல்: வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

வாலாஜாபாத், ஆக. 1: வாலாஜாபாத் அருகே வாகன சோதனையின்போது, அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி உரிமையாளர்களிடம் ₹6.30 லட்சத்தை அபராதமாக வசூலித்து வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், திருமுக்கூடல், ஆர்ப்பாக்கம், மதுர், மாகறல், இளையனார் வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து கட்டுமான பணிகளுக்காக காஞ்சிபுரம், வாலாஜாபாத் செங்கல்பட்டு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு எம்-சாண்ட், ஜல்லி கற்கள், மலை மண் உள்ளிட்டவைகள் கனரக லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன.

இவ்வாறு, எடுத்து செல்லப்படும் லாரிகள் முறையாக தார்ப்பாய் போர்த்தி லாரி ஓட்டுநர்கள் இயக்குவதில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளில் மற்றும் சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், நேற்று வாலாஜாபாத் அடுத்த வெண்குடி பகுதியில் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகர், தாசில்தார் கருணாகரன், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் கனரக லாரிகள் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தை நோக்கி சென்ற லாரிகளை ஆய்வு செய்தனர். அதில், பெரும்பாலான லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும், தார்ப்பாய் இன்றி லாரியை இயக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து, 10க்கும் மேற்பட்ட லாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து ₹6.30 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், லாரி உரிமையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் லாரியை இயக்கும்போது கண்டிப்பாக அதிக பாரங்கள் ஏற்றக்கூடாது, தார்ப்பாய் இன்றி செல்லக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி