வாலாஜாபாத்தில் அனைத்து துறை திட்ட சிறப்பு முகாம்: கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் நடந்த அனைத்து துறை திட்ட சிறப்பு முகாமில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், செல்வம் எம்பி, உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அனைத்து துறையில் சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு, முகாமினை துவக்கி வைத்து, பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த அனைத்து துறையில் சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, மற்றும் வனத்துறைகளின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்களுக்கு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

தோட்டக்கலை துறை சார்பில், ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, செயல்படுத்தி காட்டப்பட்டது. மகளிர் திட்டம் சார்பில், சிறுதானியம் மற்றும் உணவு முறைகள் காட்சியமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறுதானியத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வனத்துறை சார்பில், மரங்கள் மற்றும் மரங்களினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், இம்முகாமினை பயன்படுத்தி மக்கள், தேவைப்படும் நலத்திட்டங்களை சம்பந்தப்பட்ட துறையின் முகாம் அலுவலர்களை சந்தித்து தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இம்முகாமில் காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ் வாலாஜாபாத் வட்டாட்சியர் சுபப்பிரியா, வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர், பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு

பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து