வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

திருச்சி, செப்.24: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு பணி முடிந்து, அவர்கள் குறித்த விவரங்கள், வார்டு குழு அலுவலக வாரியாக பிரிக்கப்பட்டு, வியாபாரிகள் பார்வையிட வசதியாக மாநகராட்சியின் அனைத்து வார்டு குழு அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசியம் கருதி கடந்த ஜூலை.10ம் தேதி சாலையோர வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் மாநகராட்சியின் கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 231 வியாபாரிகள் உள்ளதாகவும், இப்பட்டியலில் சில வியாபாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், கூடுதல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் சாலையோர வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து விடுபட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்யும் இடத்திற்கு சென்று கூடுதல் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவள்ளதாக நாழிதழ்களில் இரண்டு முறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி, விடுபட்ட 989 சாலையோர வியாபாரிகளின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட மொத்தம் 6 ஆயிரத்து 220 சாலையோர வியாபாரிகள் பெயர்கள் அடங்கிய விவரங்கள், வார்டு குழு அலுவலக வாரியாக பிரிக்கப்பட்டு, அனைத்து சாலையோர வியாபாரிகளும் பார்வையிட வசதியாக அந்தந்த வார்டு குழு அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சரவணன் வியாபாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்