Tuesday, July 9, 2024
Home » வாரியம் கிடைக்காததால் வாடிக்கிடக்கும் பாஜ ஆதரவு எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வாரியம் கிடைக்காததால் வாடிக்கிடக்கும் பாஜ ஆதரவு எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘சொந்த வார்டுகளிலேயே வேட்பாளர்களை நிறுத்த பயப்பட்டாங்களாமே எதிர்க்கட்சி மாவட்ட செயலாளர்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெயிலூர் மாநகராட்சியில் 2 திமுக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான வார்டுகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் எதிர்க்கட்சி மாவட்ட செயலாளர்கள் தாங்கள் வசிக்கும் வார்டு பகுதியில் தங்களுடைய கட்சி வேட்பாளர்களை யாரும் நிறுத்தவில்லை. அதிமுகவில் கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட வேட்பாளர் வெளியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். தமாகா மாவட்ட செயலாளரும் தனது வார்டில் போட்டியிடவில்லையாம். அதேபோல் தனித்து போட்டியிடும் முரசு கட்சியின் மாவட்ட செயலாளரும் தன்னுடய வார்டில் யாரையும் நிறுத்தவில்லையாம். பல வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவித்துவிட்டு எதிர்க்கட்சி மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய சொந்த வார்டுகளில் தங்களுடைய கட்சி வேட்பாளர்களை கூட நிறுத்தாமல் தட்டி கழித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட செயலாளர்களாக பதவியில் இருந்து கொண்டு தங்களுடைய சொந்த வார்ட்டில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்து தனது செல்வாக்கை காட்டி இருக்க வேண்டும். ஆனால் அவர்களே இப்படி செல்வாக்கு இல்லாமல் இருப்பதால் மற்ற வேட்பாளர்களுக்கு எப்படி மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்று எதிர்கட்சி தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பட்டா மாற்றிய வழக்கில் முக்கிய புள்ளிகள் எல்லாம் சிக்குகிறார்களாமே..’’  ‘‘ஹனீபீ மாவட்டத்தில் 182 ஏக்கர் அரசு நிலத்தை மோசடியாக தனியாருக்கு பட்டா  மாற்றிய வழக்கில் சிபிசிஐடி விசாரணை தீவிரமடைந்து வருகிறது. அதே நேரம்  இவ்வழக்கில் இலைக்கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளரான ஒரு பறவையின் பெயரை  கொண்டவர் மட்டுமே சிக்கி உள்ளார். கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது நடந்த  இந்த மோசடியில், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடந்தையாக  இருந்துள்ளனர். மிகப்பெரிய நில மோசடி நடந்துள்ள நிலையில், மாவட்ட அளவில்  இலைக்கட்சியின் சாதாரண பிரமுகரே சிக்கி உள்ளார். மிக மிக முக்கிய  புள்ளிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகப்பார்வை மாவட்ட  மக்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக மோசடியில் சிக்கியுள்ள அதிகாரிகள்,  இலைக்கட்சி பிரமுகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடந்து வருவதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த வழக்கில் அக்கட்சியின் முக்கிய  பிரமுகர்களிடம் விசாரணை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற பேச்சு  பரவலாகவே ஓடுகிறது’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுச்சேரி நிலவரம் என்ன..’’  ‘‘புதுச்சேரியில் பாஜ ஆதரவு எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர்,  கொல்லப்பள்ளி சீனுவாஸ் ஆகிய 3 பேர் தங்கள் தொகுதியில் அடிப்படை வசதிகளை  செய்யவில்லை. வாரிய தலைவர் பதவி வழங்கவில்லை. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு  நிதியை தவிர எந்த நிதியும் தொகுதிக்கு ஒதுக்கப்படவில்லை என பகிரங்கமாக  குற்றச்சாட்டு கூறினர். இவர்களை சபாநாயகர் செல்வம் அழைத்து பேசினார்.  அதனைதொடர்ந்து கவர்னரையும் அவர்கள் சந்தித்தனர். விரைவில் எங்கள்  கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என பேட்டி கொடுத்து விட்டு சென்றனர்.  ஆனால் இதில் அங்காளன் எம்எல்ஏ மட்டும் சந்திக்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவு  தெரிவித்தால் வாரியம் கிடைக்கும். சுழல் விளக்குகளில் சுற்றலாம். மக்கள் நல  பணியில் தீவிரமாக ஈடுபடலாம் என இருந்த சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜக ஏமாற்றி  விட்டது என அவர்களது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். ஏற்கனவே  என்.ஆர்.காங்கிரசில் அமைச்சராக இருந்தவர் அங்காளன். இவர் இந்த முறை  பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது புல்லட்சாமிக்கு பிடிக்கவில்லையாம்.  மொத்தத்தில் புல்லட் சாமியின் சதுரங்க ஆட்டம் காரணம் என என்.ஆர்.காங்கிரஸ்  கட்சியினர் மகிழ்ச்சியில் கூறி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டாஸ்மாக் விவகாரம் ஏதோ பரபரப்பா பேசப்பட்டுட்டு இருக்கே.. என்ன மேட்டர் அது..’’ என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தஞ்சை  மாவட்ட டாஸ்மாக் உயரதிகாரிகள் 2 ஊழியர்களை காப்பாற்ற படாத பாடுபட்டுக்  கொண்டு இருப்பது தான் தற்போது டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சாக  உள்ளது. கடந்த தைப்பூசம் நாளுக்கு முதல் நாள் இரவு தஞ்சை டாஸ்மாக்  குடோனிலிருந்து லாரியில் மதுக்கூர் பகுதி டாஸ்மாக் மதுபான கடைக்கு சரக்கு  ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. இரவு 10 மணியை நெருங்கியதால் 2 டாஸ்மாக்  ஊழியர்கள் லாரியை கடைக்கு விடாமல் அவர்களுக்கு வேண்டிய பகுதிக்கு அழைத்து  சென்று லாரியிலிருந்து சரக்கு பெட்டிகளை எடுத்து அடுக்கி கொண்டிருந்தனர்.  இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் பார்த்துவிட்டு அருகில் வந்து  விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக 2 ஊழியர்களும், லாரி டிரைவரும்  பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் ஒருவர் போலீசாருக்கு தகவல்  கொடுக்க 2 ஊழியர்களும், லாரி டிரைவரும் தலைத்தெறிக்க லாரியுடன்  அங்கிருந்து பறந்துவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை  மேற்கொண்டு அங்கிருந்த சரக்கு பெட்டிகளை எடுத்து காவல் நிலையத்திற்கு  சென்றுவிட்டனர். போலீசாரின் விசாரணையில், மறுநாள் தைப்பூசத்திற்கு மதுபான  கடைகள் விடுமுறை என்பதால் டாஸ்மாக் ஊழியர்களே பிளாக்கில் விற்பனை  செய்வதற்காக சரக்கு பெட்டிகளை எடுத்து சென்று பதுக்க முயன்றது  தெரியவந்ததாம். இது குறித்து மாவட்ட டாஸ்மாக் உயரதிகாரிகளுக்கும் போலீசார்  தகவல் கொடுத்தனர்.ஆனால் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களை  காப்பாற்ற படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களாம். காரணம் அந்த ஊழியர்கள்  ஒரு வாரமாக தஞ்சை டாஸ்மாக் அலுவலகத்தில் தவம் கிடந்தார்களாம். இடையில் என்ன  நடந்தது என தெரியவில்லை. தற்போது அடையாளம் தெரியாத நபர்கள் சரக்கு  பெட்டிகளை போட்டுவிட்டு சென்றுவிட்டனர் என பைலை மூடிவிட்டனராம்’’ என்றார்  விக்கியானந்தா. …

You may also like

Leave a Comment

4 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi