விழுப்புரம் : வாட்ஸ்அப்பில் புகார் அளித்த பழங்குடி இருளர் மாணவிக்கு, விழுப்புரம் ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு மணிநேரத்தில் சாதி, இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பனைமலை வடக்கு அருகே வசித்துவரும் மகாலட்சுமி (17) என்ற பழங்குடி இருளர் வகுப்பை சார்ந்த பெண் கடந்த 15 நாட்களாக இருப்பிட சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் வேண்டி தனியார் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். இணையதளம் மூலம் விண்ணப்பித்து பல நாட்களான பிறகும் உரிய சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், வி ஏ ஓமற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் மற்றும் அன்னியூர் ஆர்ஐ அலுவலகத்திற்கு சென்ற மாணவி நடையாய் நடந்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தற்போது 12ம் வகுப்பு முடித்துள்ள அம்மாணவி உயர்கல்வி படிப்பதற்காக இந்த சான்றிதழை கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அலைக்கழித்ததால் நேற்று முன்தினம் இரவு மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு Whatsapp மூலம் இந்த தகவலை கொண்டு சென்றுள்ளார். உடனே, ஒரு மணி நேரத்தில் அதிரடியாக டிஜிட்டல் சான்றிதழ் ஆட்சியர் மோகன் வழங்கினார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோருடன் ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நேற்று காலை வந்தார். விழுப்புரம் ஆட்சியராக மோகன் பொறுப்பேற்றபோது பொதுமக்கள் எந்த கோரிக்கைகள், புகாராக இருந்தாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தார்.மேலும் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, தற்போது பொதுமக்கள் பலரும் வாட்ஸ்அப்பில் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் மீது ஆட்சியர் மோகன் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….