வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்

அண்ணாநகர், ஜூன் 14: சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஷோபனா (55), என்பவருக்கு, அதே பகுதி எச்-பிளாக் 6வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜ பிரமுகரான மீனாட்சி (38) வாடகைக்கு குடியேறினார். அப்போது, வீட்டின் கீழ் தளத்தில் தேர்தல் பணிமனையை திறந்தார். இதுதொடர்பாக ஷோபனா, திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை திறக்க போலி ஆவணங்கள் தயாரித்து, உரிமையாளரின் கையெழுத்திட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் மீனாட்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஜ மண்டல தலைவர் மருதுபாண்டியை போலீசார் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மருதுபாண்டியை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விசாரணை யில், மருதுபாண்டி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. பாஜ மண்டல தலைவர் கைது செய்யப்பட்டதை அறிந்த நிர்வாகிகள் திருமங்கலம் காவல் நிலையம் முன்பாக கூடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

விடுபட்ட பகுதிகளில் விரைவில் பாதாளசாக்கடை திட்டம்: சேர்மன் முத்துத்துரை தகவல்

கண்ணங்குடி விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறும் வாகன ஓட்டிகள்