பெரம்பலூர்,மே28:பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு ஏப்ரல் மாத ஊக்கத்தொகை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதாப்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலராக 95 பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வீடுதோறும் சென்று தொற்றாநோய்களுக்கான முதற்கட்ட பரிசோதனைகள் செய்து தொற்றாநோய் அறிகுறி உள்ள நபர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்வதுடன் பயனாளர்களுக்கு மாதாந்திர மருந்துகளையும் கொடுத்து வருகின்றனர். இந்தப் பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு ஏப்ரல் மாத ஊக்கத்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ஊக்கத்தொகை செலுத்தப்பட்டு விடும். இந்தத் தகவாலானது அனைத்து பெண் தன்னார்வலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.