ஊத்துக்கோட்டை: வாக்குப்பதிவு மையத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலா தலைமையில் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடராஜன், வெங்கடேசலு, முனுசாமி, மண்டல அலுவலர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் தேர்தல் அதிகாரி கூறியதாவது; தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளருடன் 3 நபர்கள் மட்டுமே செல்லவேண்டும். சமூக இடைவெளியுடன் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் அன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடக்கும். தேர்தல் அன்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு வேட்பாளர்கள் கையெழுத்து போட்டு இருக்க வேண்டும். வாக்குசாவடியில் முகவர்கள் அடிப்படையில் உரிய நேரத்தில் காலை 7 மணிக்கு தேர்தல் அன்று வாக்குப்பதிவு தொடங்கிவிடும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே பாதுகாப்பு கவசத்துடன் வாக்களிப்பார்கள். தேர்தல் முடிந்ததும் வாக்கு எந்திரத்தில் முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து தேர்தல் முடிக்கப்படும். வாக்குச் சாவடியில் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. விரைவில் வேட்பாளர்கள், முகவர்கள் புகைப்படத்தை கொடுத்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரி கூறினார்.கூட்டத்தில் திமுக குமரவேல், அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த தயாளன், ராஜேஷ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்….