சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு நாளன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. இதற்கான உபகரணங்களை தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி, முழு உடற்கவச உடை, 3 அடுக்கு முககவசம், காட்டன் முககவசம், 2 வகையான கையுறை, 3 வகையான கிருமிநாசினி, முக பாதுகாப்பு கவசம், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய பெட்டகம் உள்பட 13 வகையான பொருட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதுடன் கிருமிநாசினி கொண்டு கை சுத்தம் செய்தப்பின் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முககவசம் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடியில் முககவசம் வழங்கப்படும். வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜென்டுகளுக்கு, கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் மற்றும் வாக்காளர்களும் பாதுகாப்புடன் வாக்களிக்கலாம் எனவு தமிழக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்….