காஞ்சிபுரம்: வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, வந்தவம்தாங்கல், வீராகோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் தமிழரசன் (24). ராணுவ வீரர். பஞ்சாப் மாநில ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஒரு மாதம் விடுமுறையில் சொந்த ஊர் வந்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழரசன், சென்னைக்கு பைக்கில் சென்றார். இரவு அங்கிருந்து வேலூருக்கு புறப்பட்டார். காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது. இதனால் நிலைதடுமாறிய பைக், லாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த தமிழரசன், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகாவை சேந்த டிரைவர் சதீஷ்குமார் (30) என்பவரை கைது செய்தனர்.வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ஆய்வு: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் செயல்படும் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையை, ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார துறை துணை செயலாளர் மதன்லால் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மண் புழு உரம் தயாரித்தல், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, நாற்றாங்கால் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டார்.அவருடன், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, வட்டார பணி மேற்பார்வையாளர் சங்கர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் விஜயகுமார், ஊராட்சி செயலர் ராஜசேகர் ஆகியோர் இருந்தனர்….