வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ வைரலானதால் எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்: விழுப்புரம் எஸ்பி நடவடிக்கை

 

விழுப்புரம், மே 28: வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் எஸ்பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் விபத்து மற்றும் பாதுகாப்பு பணி உள்ளிட்டவைகளுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு செயல்பட்டு வருகின்றது.

இந்தப் பிரிவின் நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் சில இடங்களில் ரோந்து பிரிவு போலீசார் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே வசூல் வேட்டை புகாரில் எஸ்ஐ, ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் முதல் திண்டிவனம் வரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த எஸ்ஐ பூமிநாதன், ஏட்டு அப்துல் ரகுமான் பணியில் இருந்தபோது வாகன ஓட்டிகளிடம் சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக எஸ்பி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவரையும் உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு