புதுச்சேரி, நவ. 8: பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கையை அமல்படுத்தக்கோரி பொதுப்பணித்துறை வவூச்சர் ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குடிநீர் சப்ளை உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 13 ஆண்டுகளாக 1,500 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு வழங்கக் கோரியும் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது இவர்களை விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், மேலும் இவர்களுக்கான ஊதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுமென முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். சட்டபேரவையில் அறிவிப்பு வெளியாகியும் இதுவரை இதற்கான எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கவில்லை.
இந்நிலையில் சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்ததை நடைமுறைப்படுத்தக்கோரி 200க்கும் மேற்பட்ட வவூச்சர் ஊழியர்கள் சுதேசி மில் அருகே காலவரையற்ற போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தும் வவுச்சர் ஊழியர்கள் 2வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். இதில் பங்கேற்ற ஊழியர்கள் பொதுப்பணித்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.வவுச்சர் ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக குடிநீர் சப்ளை உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.