தாம்பரம்: தாம்பரத்தில் ஒரு வியாபாரியிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ₹2 ஆயிரம் ரொக்கப் பணம், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் முகமது கவுஸ் (30). வெங்காய வியாபாரி. இவர், கடந்த 2-ம் தேதி மேற்கு தாம்பரம், கட்டை தொட்டி தெருவில் வெங்காய லோடை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 4 பேர் கும்பல், முகமது கவுஸிடம் கத்திமுனையில் ₹2,500 ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து தாம்பரம் போலீசில் முகமது கவுஸ் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காமிரா பதிவுகளின் மூலமாக மர்ம கும்பல் குறித்து விசாரித்தனர்.இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியில் பதுங்கியிருந்த கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (19), அரவிந்த் (20), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த ஆனந்த் (20), சிட்லபாக்கத்தை சேர்ந்த ஜான்சன் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ₹2 ஆயிரம் ரொக்கப் பணம், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இவர்கள் 4 பேரும் வியாபாரி முகமது கவுஸிடம் கத்திமுனையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….